அனிருத்தும், எனது மகளும் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை விளக்கம் அளித்துள்ளார்.
தமிழில் இது என்ன மாயம் படத்தில் அறிமுகமாகி விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருதும் பெற்றார். தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேசும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக இணைய தளங்களில் கிசுகிசுக்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. இருவரும் சில மாதங்களுக்கு முன்பு நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் மிகுதியாக பகிரப்பட்டது. விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது. காதல் பற்றி இருவர் தரப்பிலும் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில் காதல் கிசுகிசுவுக்கு கீர்த்தி சுரேசின் தந்தையும், தயாரிப்பாளருமான சுரேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “கீர்த்தி சுரேசும், அனிருத்தும் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஏற்கனவே இதுபோன்ற வதந்திகள் பரவின. இப்போது 3-வது தடவையாக இந்த தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது” என்றார்.
[embedded content]
Source: Malai Malar