Press "Enter" to skip to content

ரஜினியின் சமரசம் முயற்சி தோல்வி: தனுஷ்- ஐஸ்வர்யா ஜோடி பிரிந்தது

தனுஷ்-ஐஸ்வர்யா இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியானதில்லை. அப்படி இருக்கும் போது அவர்கள் திடீரென பிரிவதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

சென்னை:

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ்.

இவர் தமிழ் திரைப்படங்கள் தவிர இந்தி திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

தற்போது தமிழில் அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், தனது மனைவியுமான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்று இரவு 11 மணிக்கு திடீரென்று அறிவித்தார். அந்த அறிவிப்பை அவர் டுவிட்டரில் வெளியிட்டார்.

தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

திடீர் பிரிவு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘கடந்த 18 ஆண்டுகள் நண்பர்களாகவும், தம்பதியராகவும், பெற்றோர்களாகவும் ஒருவர் மீது ஒருவர் நல்லெண்ணம் கொண்டவர்களாகவும் ஒன்றாக பயணித்தோம். எங்களது வாழ்க்கை பயணம், வளர்ச்சி, புரிந்துகொள்ளுதல், அனுசரித்து செல்லுதல் ஆகியவை நிரம்பியதாக இருந்தது.

தற்போது நானும், ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்தனியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்.

நாங்கள் தனியாக இருப்பது நல்லது என்று நினைத்து இந்த முடிவுக்கு வந்துள்ளோம். எங்களது இந்த முடிவை எங்களது தனிமைக்கு மதிப்பு கொடுத்து மதிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஓம் நமச்சிவாயா- அன்பை பரப்புங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ் போன்றே ஐஸ்வர்யாவும் பிரிவை உறுதிப்படுத்தி தனியாக டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். இது தமிழக திரை துறையினர், ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தனுஷ்-ஐஸ்வர்யா இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியானதில்லை. அப்படி இருக்கும் போது அவர்கள் திடீரென பிரிவதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

ஐஸ்வர்யா புதிய படம் ஒன்றை இயக்குவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தனுஷ்-ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களது பிரிவுக்கு இது காரணம் இல்லை என்றும் சொல்கிறார்கள்.

தனுஷ் சமீபகாலமாக இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த “அட்ராங்கி ரே” இந்தி படம் வெளியானது. இந்த படம் தமிழில் “கலாட்டா கல்யாணம்” என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

இன்னும் இந்தி படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்தி பட உலகில் அவருக்கு நெருங்கிய நட்பு வட்டாரம் உள்ளது. இந்தி படங்களில் நடிப்பது தொடர்பாக அவர் ஐஸ்வர்யாவுடன் எதுவும் கலந்து ஆலோசிப்பது இல்லை. தன்னிச்சையாகவே முடிவு எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இது அவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது.

இந்தி படங்களில் நடித்த பிறகு அவர் குடும்பத்தின் மீது நெருக்கம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் நடிகர் தனுஷ் மீது சமீபகாலமாக ஐஸ்வர்யா கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. தனுஷ் நடித்த படங்களில் கதாநாயகிகளுடன் அவர் நெருங்கி பழகியதை ஐஸ்வர்யா விரும்பவில்லை என்றும் அதனால் தான் இந்த பிரிவு ஏற்பட்டு இருப்பதாகவும் திரைப்படம் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

“மில்க்” நடிகை ஒருவருடன் தனுஷ் நெருக்கமாக இருந்ததாக திரைப்படம் துறையில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அந்த நடிகையின் வீட்டிலேயே அவர் எப்போதும் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதுபற்றி ஐஸ்வர்யாவுக்கு தெரிய வந்ததும் அவர் தனுசை கண்டித்ததாக தெரிகிறது. ஆனாலும் தனுஷ் அதை கேட்கவில்லை என்று திரைப்படம் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

மேலும் தெலுங்கு நடிகை ஒருவரிடமும் தனுஷ் நெருக்கம் காட்டி வந்தார். அதனாலும் அவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக கேரள நடிகை ஒருவர் நடித்துள்ளார். அவருடன் நெருக்கமாக இருப்பதாகவும் கிசுகிசு பரவியது.

இந்த நிலையில் அந்த நடிகை ஐஸ்வர்யாவை சந்தித்து தனுஷ் தனக்கு தொல்லை கொடுப்பதாக புகார் செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக தனுஷ்- ஐஸ்வர்யா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதாக தகவல் சொல்லப்படுகிறது. அவர்கள் நிரந்தரமாக பிரிவதற்கு இதுவே காரணம் என்றும் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தனுசும், ஐஸ்வர்யாவும் காதலித்தபோது அவர்களின் திருமண தேதியை தனுசே தன்னிச்சையாக அறிவித்துள்ளார். “சுள்ளான்” படத்தில் தனுஷ் நடித்துக் கொண்டிருந்தபோது ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

அப்போது சுள்ளான் படத்துக்காக பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டினார். அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது ரஜினி மகள் ஐஸ்வர்யாவை நான் திருமணம் செய்யப்போவதாக தனுஷ் அறிவித்தார்.

இதைக் கேட்ட பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திரைப்படம் தொடர்பான சந்திப்பில் திருமண அறிவிப்பை வெளியிடுகிறீர்களே? இது ரஜினிக்கு தெரியுமா? அவர் சம்மதம் தெரிவித்துள்ளாரா? என்று கேட்டனர்.

அதற்கு தனுஷ், “இது ரஜினியின் கவனத்துக்கு தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. இது எங்களின் திருமண வாழ்க்கை. எனவே எங்களின் திருமண அறிவிப்பை நானே வெளியிடுவேன்” என்று தன்னிச்சையாக அறிவித்தார்.

ரஜினிக்கு சில வருடங்களுக்கு முன்பு கோவாவில் நடைபெற்ற விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அப்போது தனுசிடம் தொலைக்காட்சி ஒன்று பேட்டி கண்டபோது, தனுசை ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்ட வி‌ஷயத்தில் உங்களுக்கு சம்மதம் தானா? என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த ரஜினி, தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு நான் திருமணம் செய்து வைக்கவில்லை. ஊடவியாளர்கள்தான் அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தனர். நிர்பந்தம் காரணமாகவே அவர்களது திருமணம் நடைபெற்றது” என்றார்.

இதிலிருந்தே தனுஷ்- ஐஸ்வர்யா திருமணத்தில் ரஜினி குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லை என்று கருதப்படுகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனுசுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், விரைவில் இருவருக்கும் விவாகரத்து என்ற தகவல் வெளிவரும் என்றும் ஒரு தகவல் வெளியானது.

ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் விவாகரத்து தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

தனுஷ்- ஐஸ்வர்யா இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அறிந்ததும், ரஜினியும் அவர் குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தனுசை சமரசம் செய்ய பலதடவை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

ஆனால் இந்த வி‌ஷயத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவில்லை. இதன் காரணமாக ரஜினி மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

இதையடுத்து பரஸ்பர நண்பர்களாக பிரிய தனுஷ்-ஐஸ்வர்யா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முதலில் இது பற்றி வெளியில் தெரிவிக்க வேண்டாம் என்று அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். என்றாலும் நேற்று இரவு திடீரென இருவரும் தங்களது பிரிவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.

தனுஷ் நடித்த முதல் படமான “துள்ளுவதே இளமை” கடந்த 2002-ம் ஆண்டு வெளியானது. அந்த படம் அவருக்கு திரைப்படம் உலகில் நிரந்தர இடத்தை கொடுத்தது. அதன் பிறகு வெளியானது காதல் கொண்டேன், திருடா திருடி படங்களும் வெற்றி படங்களாக அமைந்தன.

அதன்பிறகு தனுசுக்கு சில வருடங்களுக்கான கால்ஷீட் முழுமையானது. அந்த அளவு அவர் அதிக படங்களில் நடிக்க தொடங்கினார்.

தனுஷ் தனது திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட சுள்ளான் படம் அவருக்கு 6-வது படமாகும். 6 படங்களில் நடித்ததுமே அவர் ரஜினி மகளை திருமணம் செய்யப்போகிறார் என்ற அறிவிப்பு வெளியானதும் திரைப்படத்தில் தனுசின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்றது.

ரஜினி நடித்த பழைய படங்களான “மாப்பிள்ளை”, “படிக்காதவன்”, “பொல்லாதவன்”, “தங்கமகன்” ஆகிய படங்களின் பெயரிலும் தனுஷ் நடித்தார்.

தனுஷ் நடித்த 47 படங்கள் இதுவரை வெளியாகி உள்ளது. தமிழில் “மாறன்”, “திருச்சிற்றம்பலம்”, “நானே வருவேன்”, “வாத்தி” ஆகிய படங்களும் ஆங்கிலத்தில் “தி கிரே மேன்” என்ற படமும், தெலுங்கில் “சார்” என்ற படமும் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ளன. 16 படங்களை தனுஷ் தயாரித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »