Press "Enter" to skip to content

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் – தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

புத்தாண்டு கொண்டாட்டங்களில் பொதுமக்கள் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும்,  பரவி வரும் ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலை தடுக்கவும் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

மேலும் பண்டிகை காலங்களில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்க கூடும் என்பதால் பொது மக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில் வரும் டிசம்பர் 31-ம் தேதி தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே அவரவர் குடும்பத்தினருடன் புத்தாண்டினை மகிழ்ச்சியுடன், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டாட வேண்டும்.

வழிபாட்டுத்தலங்களில் அரசு அறிவுறுத்திய கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். புத்தாண்டு தினத்தில் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும் கூட்டம் கூடுவதையும், இரு சக்கர வாகனங்களில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.

வரும் டிசம்பர் 31-ம் தேதி இரவு காவல்துறையினரின் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது.  மது அருந்திய ஓட்டுநர்கள் கைது செய்யப்படுவர். அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும். 

நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்த்து, ரயிலிலும், பேருந்திலும் பயணிக்க வேண்டும்.

விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். 

அவசரத் தேவைகளுக்காக நீண்ட தூரம் நான்கு சக்கர வாகனத்தில் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள், மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி தேநீர் அருந்தி, பின்னர் பயணத்தினை தொடர வேண்டும்.

ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிகளின்படி இரவு 11 மணி வரை செயல்படும். ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என ஓட்டல் நிர்வாகம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டினை குறித்து தகவலை அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவித்தால், ரோந்து காவலர்கள் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். இதனால் திருட்டு சம்பவங்கள் தவிர்க்கப்படும்.

பொது இடங்களில் அமைதிக்கு குந்தம் விளைவிப்பவர்கள் ரோந்து வாகன கண்காணிப்பு ஒளிக்கருவிகள் (ஒளிக்கருவி (கேமரா)க்கள்) மூலம் கண்காணிக்கப்படுவார்கள். கன்னியமற்ற மற்றும் அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர்,எந்திர இருசக்கரக்கலன் (பைக்) போட்டி உள்ளிட்ட ஆபத்தான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள்.

அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100, 112 எண்களை தொடர்புக்கொள்ளலாம்.  காவலன் எஸ்.ஓ.எஸ். செயலியை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விபத்தில்லா புத்தாண்டு கொண்டாடி தமிழக காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்கிறோம். அனைவருக்கும் தமிழ்நாடு காவல் துறையின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு சைலேந்திர பாபு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »