Press "Enter" to skip to content

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு இந்த மாதமும் தடை

இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கி மறுநாள் 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.51 மணி வரை உள்ளது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இக்கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிவார்கள்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கி மறுநாள் 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.51 மணி வரை உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களில் மலை சுற்றும் பாதையில் 14 கிலோ மீட்டர் கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது.

இதன் காரணமாக திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் வர வேண்டாம் என பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அரசின் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »