Press "Enter" to skip to content

பொருளாதாரம் பற்றி மோடிக்கு ஒன்னும் தெரியாது… மோடியை வெளுத்துவாங்கிய ராகுல் காந்தி!

பொருளாதாரம் பற்றி பிரதமர் மோடிக்கு எதுவும் தெரியாது. பொருளாதாரம் பற்றி மோடி படிக்கவும் இல்லை; அதைப் புரிந்துகொள்ளவும் இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது பிரதமர் மோடியை பல்வேறு விவகாரங்களில் தாக்கி பேசினார். “காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதம் வளர்ச்சியடைந்தது. இதை உலகமே இந்தியாவை உற்றுநோக்கியது. ஆனால்,  தற்போதைய பாஜக ஆட்சியில் உள் நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாக இருக்கிறது. உண்மையில் அது 2.5 சதவீதமாகத்தான் இருக்கும்.


பொருளாதாரம் பற்றி பிரதமர் மோடிக்கு எதுவும் தெரியாது. பொருளாதாரம் பற்றி மோடி படிக்கவும் இல்லை; அதைப் புரிந்துகொள்ளவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், ஜிஎஸ்டி என்றால் என்ன என்றுகூட மோடிக்கு தெரியாது. மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் தீங்குதான் ஏற்பட்டது என்பதை 8 வயது குழந்தை கூட சொல்லிவிடும். 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் உறுதியளித்தார். ஆனால் கடந்த ஆண்டில் மட்டும் 1 கோடி இளைஞர்கள் நாட்டில் வேலையை இழந்துள்ளனர்.


பிரதமர் மோடி எங்கு சென்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு பற்றிப் பேசுகிறார். ஆனால், வேலையின்மை எனும் பிரச்னையை பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசுவதில்லை. இந்தியாவின் அடையாளமாகச் சகோதரத்துவமும் ஒற்றுமையும் இருந்தன. அந்த அடையாளத்தை பிரதமர் மோடி சீரழித்துவிட்டார். இந்தியா இன்று உலகின் கற்பழிப்பு தலைநகராக மாறிவிட்டது” என குற்றம்சாட்டி ராகுல் காந்தி பேசினார்.

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »