சென்னை: ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து அதன் துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டது, திமுகவில் இருக்கும் சில மூத்த தலைவர்களை நிம்மதி அடைய செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணங்கள் நிறைய இருக்கிறது.
தமிழகத்தில் திமுகவிற்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் ஆலோசகராக இருக்கிறார் . கடந்த நவம்பர் மாதம்தான் இவர் அதிகாரபூர்வமாக திமுகவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஆனால் அதற்கு முன்பே அக்டோபர் மாதமே அதிகாரபூர்வமற்ற முறையில் பிரசாந்த் கிஷோர் திமுகவிற்காக திட்டங்களை வகுத்து வந்தார்.
அதில் திருப்தி அடைந்த திமுக தலைவர் ஸ்டாலின் திமுகவிற்காக இவரை நேரில் அழைத்து இருக்கிறார். இவரின் வருகைக்கு பின் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சிறப்பாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
வியூகம் வகுப்பதில் வல்லவர்.. அப்போது மோடியின் மாஸ்டர் மைண்ட்.. இப்போது வைரி.. பிகேவின் புது ஆட்டம்!
ஆனால் என்ன
ஆனால் வடஇந்தியர் ஒருவருக்கு தமிழக அரசியல் எப்படி தெரியும். திமுகவிற்கு ஏற்கனவே நல்ல அரசியல் ஆலோசகர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது இவரை ஏன் கொண்டு வர வேண்டும். தமிழக மக்களின் மனநிலை குறித்து இவருக்கு என்ன தெரியும். ஏற்கனவே அரசியல் ஆலோசனை வழங்கியவர்களை ஏன் அனுப்ப வேண்டும். ஸ்டாலின் ஆட்சியை பிடிக்க ஆசைப்படும் நிலை ஏன் இந்த தேவையில்லாத வேலை. ஏன் இப்படி ரிஸ்க் எடுக்கிறார் என்று பலர் கேள்வி எழுப்பினார்கள்.
வேறு என்ன
அதோடு திமுக லோக்சபா தேர்தலில் சிறப்பாக வெற்றிபெற்றது. அப்படி இருக்கும் போது ஏன் புதிதாக வேறு ஒரு அரசியல் ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்று கேள்விகள் எழுந்துள்ளது. அதேசமயம் இப்படி ஒரு மாஸ்டர் மைண்ட் திமுகவிற்காக வந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. திமுக இதன் மூலம் தமிழக சட்டசபை தேர்தலுக்கு தயாராகிவிட்டது என்று கூறினார்கள். இவரின் செயல்பாட்டை உள்ளாட்சி தேர்தல் மூலம் திமுக டெஸ்ட் செய்துள்ளது.
ஆனால் என்ன
ஆனால் அதே சமயம் பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்தது திமுகவினர் சிலரை சந்தேகத்திற்கு உள்ளாக்கியது. ஐக்கிய ஜனதா தளம் பாஜகவிற்கு நெருக்கமான கட்சி. அவர்கள் பீகாரில் பாஜகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அந்த கட்சியை சேர்ந்த ஒருவரை ஆலோசகராக நியமிப்பது எப்படி சரியாக இருக்கும். அவரை எப்படி முழுமையாக நம்புவது. இது தமிழகத்தில் பாஜகவிற்கு ஒரு வகையில் சாதகமாக முடியும் என்று கூறி வந்தனர்.
என்ன சண்டை
இந்த நிலையில்தான் சிஏஏவை பிரசாந்த் கிஷோர் கடுமையாக எதிர்த்தார். தனது கட்சியையும் மீறி அவர் மசோதாவை எதிர்த்து வந்தார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க உத்தரவு பிறப்பித்தார். இதனால் கட்சிக்குள் பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டது. இந்த சண்டையை தொடர்ந்து தற்போது ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து அக்கட்சியின் துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டுள்ளார். கட்சியில் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது, அவருடன் பேச கூடாது என்று தலைவர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
என்ன சந்தோசம்
ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து அதன் துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டது, திமுகவில் இருக்கும் சில மூத்த தலைவர்களை நிம்மதி அடைய செய்துள்ளது. பாஜகவுடன் அவர் தொடர்பை இழந்துவிட்டார். பாஜகவிற்கு எதிராக செயல்படத்தொடங்கிவிட்டார். இப்படி இருப்பதுதான் திமுகவிற்கு பாதுகாப்பு. இனி அவரை முழுமையாக நம்பலாம் என்று திமுக மூத்த தலைகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள். பிரசாந்த் கிஷோரின் வெளியேற்றம் தமிழக அரசியலிலும் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
Source: OneIndia