மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மதுரை கல்லூரி வளாகத்தில் திரண்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நேற்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்தநிலையில், மதுரையில் பல்வேறு அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக அரசரடி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இரவில் அறவழி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஏராளமானவர்கள் அரசரடி பகுதியில் உள்ள அந்த கல்லூரி வளாகத்தில் திடீரென மொத்தமாக திரண்டனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், குடியுரிமை சட்ட திருத்தத்தை ரத்து செய்ய கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
Related Tags :
Source: Maalaimalar