Press "Enter" to skip to content

5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வா..? இந்தத் திட்டம் கூடவே கூடாது… தமிழக அரசு மீது வைகோ சுளீர்!

5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது என்பது அந்த மாணவர்களை உளவியல் ரீதியாகப் பாதித்துவிடும். 5-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு வைப்பது மிகவும் தவறு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். “உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என போற்றப்படும் நாடு இந்தியா. ஆனால், இங்கே ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கக்கூடிய காட்சியைத்தான் பார்க்க முடிகிறது. கர்நாடகாவில் கல்வி நிறுவனத்தில் ஆண்டுவிழாவில் ஆளும் கட்சியைக் கேலி செய்து நிகழ்ச்சிகள் நடந்ததற்கு கல்வி நிறுவனம் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. இதைக் காணும்போது நாடு பாசிசத்தை நோக்கிச் செல்வது தெரிகிறது. இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் கடும் விபரீதங்கள் ஏற்படும். அந்தக் கல்வி நிறுவனம் மீது போடப்பட்ட வழக்கை கர்நாடக அரசு திரும்பப் பெற வேண்டும்.
ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் அரசுத்துறைகளில் ஊழல் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. ஆனால், குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்ட இடத்தில் டி.என்.பி.எஸ்.சி. இருக்கிறது. அங்கெல்லாம் ஊழல் நடக்காது என்றே நம்பி வந்தோம். ஆனால், அங்கே இவ்வளவு பெரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. தற்போது குரூப்-1 தேர்விலும் முறைகேடுகள் நடந்திருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால், முறைகேடு நடந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு விடவேண்டும்.


5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது என்பது அந்த மாணவர்களை உளவியல் ரீதியாகப் பாதித்துவிடும். 5-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு வைப்பது மிகவும் தவறு. இந்தத் திட்டத்தை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். இந்த விவகாரம் முடிவுக்கு வர வேண்டும். இது குழந்தைகளின் மனநிலை, கல்வியைப் பாதிக்கும். இதை கல்வி அமைச்சர் உணர வேண்டும்” என வைகோ தெரிவித்தார்.

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »