தர்மபுரி: தர்மபுரி அருகே வங்கி அதிகாரி திருமணம் செய்ய மறுப்பதால், உயிரை விடுவேன் என இளம்பெண் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த 25 வயது இளம்பெண் தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள தனியார் வங்கியில், உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் பணிபுரிந்த வங்கியில் பணியாற்றிய அதிகாரி ஒருவரும், ராஜேஸ்வரியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் வங்கி அதிகாரி அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
இது தொடர்பாக, அரூர் காவல் நிலையம், தர்மபுரி ஏடிஎஸ்பி மேகலா ஆகியோரிடம் வங்கி உதவி பெண் மேலாளரான அப்பெண், வங்கி அதிகாரியை தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்திருந்தார். ஆனால், இவரது புகாரின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று அவர் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘‘வெங்கட்டம்பட்டியை சேர்ந்த வாலிபர் என்னை காதலிப்பதாக கூறி, கடந்த ஒரு வருடமாக என்னுடன் பழகினார். நாங்கள் நெருக்கமாக பழகினோம்.
தற்போது அவரது வீட்டில் அவருக்கு வேறு ஒரு பெண்ணை திடிருமணம் செய்ய முயற்சிக்கின்றனர். இதுபற்றி நான் கேட்டபோது, ‘நம் திருமணத்திற்கு எனது தாய் சம்மதிக்கவில்லை’ என கூறி, என்னை திருமணம் செய்ய மறுத்து வருகிறார். காவல் நிலையம், எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தும், எனக்கு எந்த இடத்திலும் நியாயம் கிடைக்கவில்லை. இறுதியாக கலெக்டரை சந்திக்க உள்ளேன். அவரிடமும் எனக்கு நியாயம் கிடைக்கல்லை என்றால் உயிரை விடுவேன். எனது சாவுக்காவது நியாயம் கிடைக்க வேண்டும்’’ என கூறியுள்ளார். இந்த வீடியோ வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுவதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source: Dinakaran