Press "Enter" to skip to content

இன்று மத்திய வரவு செலவுத் திட்டம் தாக்கல் – வருமான வரி சலுகை அறிவிப்பு வருமா?

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். வருமான வரி சலுகை அறிவிப்பு வருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

புதுடெல்லி:

மத்திய பட்ஜெட், பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்கம் இருந்து வந்தது.

இந்த வழக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முதலாவது பாரதீய ஜனதா கூட்டணி அரசு கடந்த 2017-ம் ஆண்டு மாற்றியது. அப்போது முதல் பிப்ரவரி 1-ந் தேதியன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், நேற்று தொடங்கியது. நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.5 சதவீத அளவுக்கு இருக்கும் என எதிர்பார்ப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ள நெருக்கடியான கால கட்டத்தில் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகிறார். இது அவர் தாக்கல் செய்கிற இரண்டாவது பட்ஜெட் ஆகும்.

இந்த பட்ஜெட்டை பொறுத்தமட்டில் வழக்கம்போலவே தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா என்ற பெருத்த எதிர்பார்ப்பு உள்ளது. மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்த இது உதவும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

தற்போது ரூ.5 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி விதிப்பு கிடையாது என்ற நிலை உள்ளது. ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக உள்ளவர்களுக்கு வருமான வரி விதிக்கப்படுகிறது. குறிப்பாக ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் 5 சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது. ரூ.7 லட்சம் வரையில் 5 சதவீதம் வரி என்ற அளவுக்கு சலுகை அளித்து அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

முக்கிய தொழில் துறைகள் முடங்கியுள்ள நிலையில் அவற்றை மீட்டெடுக்க ஏற்ற வகையில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகுமா என்று தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

இப்போது ரெயில்வே பட்ஜெட்டும் மத்திய பட்ஜெட்டுடன் இணைத்தே தாக்கல் செய்யப்படுகிறது. சமீபத்தில்தான் ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. எனவே ரெயில் கட்டண உயர்வு இருக்காது.

புதிய ரெயில்கள், புதிய வழித்தடங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »