Press "Enter" to skip to content

ஆட்சியை கலைச்சுட்டு போங்க! எனக்கு ஒரு கவலையுமில்லை..! அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..!

ஆட்சியை கலைச்சுட்டு போங்க! எனக்கு ஒரு கவலையுமில்லை:      அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு

ஜெயலலிதா மரணத்திற்கு பின் பல சென்சிடீவ் சூழல்களை கடந்த அ.தி.மு.க., ஒரு வழியாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றதுடன் ஒரு பொசிஷனுக்கு வந்து நின்றது. கவிழ்ந்துவிடும், கவிந்துவிடும்! என்று எதிர்பார்க்கப்பட்ட ஆட்சியானது இதோ இந்த நிமிடம் வரை கெத்தாக ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. 

ஜெயலலிதா முதல்வராக இருந்த வரையில் ஒவ்வொரு அமைச்சருமே ஒவ்வொரு நாளும் ‘நாளை நாம் இந்த பதவியில் இருப்போமா?’ எனும் பதட்டத்தோடேதான் இருந்தனர். காரணம் எப்போ? எதற்காக? பதவி பறிபோகுமென்றே தெரியாத நிலை. ஆனால் எடப்பாடியார் அமைச்சரவையில் அந்த மாதிரி எந்த பயமுமில்லை அமைச்சர்களுக்கு. முழு சுதந்திரத்தை தந்துள்ளார் முதல்வர்.

ஆனால் பல நேரங்களில் அந்த சுதந்திரத்தை ’மிஸ் யூஸ்’ செய்து விடுகின்றனர் அமைச்சர்கள்! எனும் விமர்சனமும், குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. சமீப காலமாக சில அமைச்சர்களின் பேச்சுக்கள் மிகவும் சர்ச்சையை கிளப்பி ஆட்சிக்கு அவப்பெயரை இழுத்து வருகின்றன. சில அமைச்சர்களின் கவனமற்ற செயல்பாடுகளால் அவர்களின் துறைகள் சர்ச்சைகளில் சிக்கி சங்கடப்படுத்துகின்றன. 

இந்த நிலையில்தான் பொறுத்துப் பொறுத்து பொறுமை காத்த முதல்வர் கடந்த திங்கட்கிழமையன்று மாலையில் பொங்கி எழுந்துவிட்டாராம் அமைச்சர்களிடம். கோட்டையில் முதல்வரும், துணை முதல்வரும் ஒரு தனியறையில் அமர்ந்து மற்ற அமைச்சர்களை ஒவ்வொருவராக வரச்சொல்லி சந்தித்து, அவர்களின் பர்ஷனல் தவறுகள், துறை பிரச்னைகளை சொல்லி லெஃப்ட் அண்டு ரைட்டு வாங்கிவிட்டாராம் எடப்பாடியார். 
இது பற்றி ஒரு பிரபல வாரம் இருமுறை அரசியல் புலனாய்வு இதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வந்திருக்கும் தகவல்களில் ஹைலைட்டானவை இதோ….

*    ’உங்க துறையில என்ன நடந்திருக்குது, உங்க மாவட்டத்துல என்ன நடந்திருக்குதுன்னு என்கிட்ட ரிப்போர்ட் இருக்குது. உங்க இஷ்டத்துக்கு துறையை நடத்துறீங்க! ஆனால் கட்சிக்கு உங்க பங்களிப்பு என்ன?’ என்று முதல்வர் சீறியிருக்கிறார். 

*    ’உள்ளாட்சி தேர்தல்ல கட்சியின் வெற்றிக்காக என்ன பண்ணுனீங்க? அதுல கிடைச்ச பலன் என்ன? உங்க மாவட்டத்துல இவ்வளவு சறுக்கியிருக்குது கட்சி. சரி நீங்க என்ன பண்ணுனீங்க? அப்படின்னு என்னை பார்த்து நீங்க கேட்கலாம். இதோ என்னோட பங்களிப்பை காட்டுறேன்….கவனிச்சுக்கோங்க.’ என்று பட்டியல் போட்டு கொடுத்திருக்கிறார் தனது உழைப்பு உள்ளிட்ட இத்யாதி விஷயங்களை.

*    முதல்வரின் பக்கத்திலிருந்த ஓ.பி.எஸ்.ஸோ ‘கட்சியை என்னாங்க பண்ணிட்டு இருக்கீங்க? சர்ச்சை, பஞ்சாயத்து, பிரச்னை! ஆளுங்கட்சி மாதிரியா இது இருக்குது? உங்களோட நலனை மட்டுமே கவனிச்சுட்டு இருந்தால் கட்சியை யார் காப்பாத்துறது?’ என்று விளாசியிருக்கிறார் கேள்விகளில். 

*    சீனியர் மோஸ்ட் மனிதர் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்காமல் செங்கோட்டையனுக்கும் அர்ச்சனை விழுந்திருக்கிறது. அவரது துறையில் திட்டங்களில் துவங்கி அறிவிப்புகள் வரையில் உள்ள குழறுபடிகளால் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டை சொல்லி வருந்தவும் செய்திருக்கிறார் முதல்வர். ‘இதுவா கல்வி புரட்சி?’ என்று முதல்வர் கேட்டதை, வெளியே வந்த செங்கோட்டையன் சொல்லிச் சொல்லி கடுப்பாகி இருக்கிறார். 

*    அதிகம் வாங்கிக் கட்டிய அமைச்சர்களில் ஓ.எஸ்.மணியன், ராஜேந்திரபாலாஜி, செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜு, ஜெயக்குமார் ஆகியோருக்கானவை ஸ்பெஷல் எபிஸோடுகளாம். 
*    எல்லா அமைச்சர்களையும் விளாசி எடுத்துவிட்டு கடைசியில் ஓ.பி.எஸ். துறையின் பிரச்னைகளையும் லிஸ்ட் போட்டு சொல்லி ‘சரி பண்ணிடுங்க. இல்லேன்னா கட்சிக்கு சங்கடம்’ என்றாராம் பவ்யமாக. 

*    இதில் ஹாட்டான விஷயம் என்னவென்றால் எல்லா அமைச்சர்களிடமும் ‘என்ன இவரு அம்மா மாதிரி கேள்வி கேட்கிறார், விசாரிக்கிறார்னு நினைக்காதீங்க. உங்களுக்கு இதெல்லாம் பிடிக்காம, கோவம் வந்து ஆட்சியை கலைச்சுடலாம்னு நினைச்சாலும் தாராளமா செய்யுங்க. எனக்கு எந்த கவலையும் கிடையாது.’ என்று முகத்திலடித்தாற்போல் சொல்லி விட்டாராம். 
இதில்தான் அனைத்து அமைச்சர்களும் அதிர்ந்து கிடக்கின்றனர்! 

இப்படியாக போகுது அந்த விவரிப்பு.
 

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »