பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதலில் சீனாவில் பலி எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. அது போல் 14000-க்கும் மேற்பட்டோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் முதல் அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் பாதிப்பால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை நிலவரப்படி இதுவரை 304 பேர் சீனாவில் பலியாகியுள்ளனர். மேலும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சீனா தனித்து விடப்பட்ட நாடாக மாறிவிட்டது.
சீனாவுக்கு பயணம் செல்வது ரத்து, விமான போக்குவரத்து ரத்து, சீனாவில் உள்ள மற்ற நாட்டவரை அந்தந்த நாட்டு அரசு தாயகம் அழைத்து செல்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால் பொருளாதாரத்தில் உலகளவில் 2-ஆவது இடத்தில் உள்ள நாடான சீனா மிகவும் அபாயகரமான இடத்தில் உள்ளது.
இந்த வைரஸ் பாதிப்புக்காக உலக சுகாதார நிறுவனம் மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவிலிருந்து 200-க்கும் மேற்பட்டோர் நேற்று சீனாவிலிருந்து பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். அவர்கள் நேரடியாக வீட்டுக்கு அனுப்பப்பட மாட்டார்கள்.
தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 10 நாட்கள் தங்க வைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுவர் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
Source: OneIndia