Press "Enter" to skip to content

கெஜ்ரிவாலுக்கு பாக். தொடர்பு என்பதா? யோகி ஆதித்யநாத்தை சிறையில் அடைக்கனும்.. ஆம் ஆத்மி சஞ்சய் சிங்

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தான் தொடர்பு என தேர்தல் பிரசாரத்தில் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறியுள்ளார்.

டெல்லி சட்டசபை தேர்தல்களில் அரசியல் கட்சிகள் பரஸ்பரம் பகீர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றன. டெல்லியில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரம் செய்தார்.

பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பிரசாரம் செய்த யோகி ஆதித்யநாத், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பிருக்கிறது என குற்றம்சாட்டினார். மேலும் டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களுக்கு கெஜ்ரிவால் உதவி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்து ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங் கூறியதாவது: கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளதாக கூறிய யோகி ஆதித்யநாத்தை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

பாகிஸ்தானுக்கும் கெஜ்ரிவாலுக்குமான தொடர்புகள் குறித்து ஆதாரங்களை யோகி ஆதித்யநாத் நிரூபிக்க வேண்டும். இத்தகைய பிரசாரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் அமைதியாக இருந்து வருகிறது.

டெல்லியில் யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு சஞ்சய் சிங் கூறினார்.

இதனிடையே தேர்தல் ஆணையத்துக்கு ஆம் ஆத்மி கட்சி புகார் மனு ஒன்றை அளித்துள்லது. அதில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்திருக்கிறார்.ஆகையால் தேர்தல் முடியும் வரை யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்.

மேலும் யோகி ஆதித்யநாத் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »