சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே பரிபூரணநத்தம் கிராமத்தில் உள்ள குளத்தில் ஆகாய தாமரைகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பரிபூரணநத்தம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கிராமத்தின் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பரிபூரணநத்தம் கிராமத்தில் உள்ள குளத்தில் பொதுமக்கள் குளிப்பது, துணிதுவைத்தல், கால்நடைகள் பராமரிப்பு போன்றவற்றுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது ஆகாயத்தாமரைகள் மண்டிக்கிடக்கும் குளமாக மாறிப்போய்விட்டது. இதனால் கிராமத்தில் கொசுத்தொல்லை அதிகரிப்பதோடு, துர்நாற்றமும் வீசுகிறது. இது நோய் பரவுவதற்கு காரணமாகி விடுகிறது. மேலும் பலர் தங்கள் வீட்டு வடிகால் நீரை இந்தக்குளத்திலும் விடும் அவலம் நடக்கிறது. பலமுறை குளத்தை தூர் வார நிதி ஒதுக்கியும் ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குளத்தை சீரமைக்காததால் கிராமத்தில் பொது சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பொதுமக்க ளுக்கு எனவே ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தனி கவனம் எடுத்து பரிபூரணநத்தம் பெரிய குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source: Dinakaran