வேதாரண்யம்: வேதாரண்யத்தில் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி துவங்கியது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்களும், இரண்டு தனியார் நிறுவனங்களும் உப்பு உற்பத்தியில் ஈடுபடுகின்றன. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் வேதாரண்யத்தில் ஆண்டுதோறும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. அகஸ்தியன்பள்ளியில் 3 ஆயிரம் ஏக்கரில் சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்கள் சாப்பாட்டு உப்பும், கோடியக்காடு கடினல்வயல் பகுதிகளில் தொழிற்சாலைக்கு தேவையான ரசாயன உப்பும் உற்பத்தி செய்யப்படுகிறது.
வழக்கமாக ஜனவரி மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை உப்பு உற்பத்தி நடைபெறும். மழைக்காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் உப்பு உற்பத்தி நிறுத்தப்படும்.இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆண்டு உற்பத்திக்கான தரிசு வேலைகள் துவங்கி தை1ம் தேதி பொன் உப்பு எடுக்கப்பட்டது. உப்பள பாத்திகளை களிமண் மற்றும் புழுதி மணலைக் கொண்டு சீர் செய்து காலால் மிதித்து பாத்தியை சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று இந்தஆண்டிற்கான உப்புஉற்பத்தி துவங்கியுள்ளது.
உப்பள பணிகள் துவங்கியதால் உப்பள தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வழக்கமாக மழைக்காலத்தில் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள உப்பு சென்றமாதம் ஒரு டன் ரூ.2,000க்கு விற்பனையானது. இந்தஆண்டு உப்பு உற்பத்தி குறிப்பிட்ட காலத்தில் துவங்கப்பட்டுள்ளதால் உப்பு நன்றாக இருக்கும் என உப்பு உற்பத்தியாளர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
Source: Dinakaran