Press "Enter" to skip to content

அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் வலியுறுத்தல்

மானாமதுரை:  மதுரை-திருவனந்தபுரம் இடையே தினமும் இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்னக ரயில்வேயில் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ராமேஸ்வரத்தில் இருந்து பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மீட்டர்கேஜ் பாதை மூலம் சென்னை, பாலக்காடு, கோவை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு தினமும் ரயில்கள் இயக்கப்பட்டன. அகல ரயில்பாதை பணிக்காக கடந்த 2006 ஜூலை 14ம் தேதி கோவை, பாலக்காடு தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நிதி ஒதுக்கப்படாமலும் மக்கள் பிரதிநிதிகளின் அக்கறையின்மையாலும் பல ஆண்டுகளாக ஆமைவேகத்தில் நடந்து வந்த அகலப்பாதையில் ஒரு கட்டமாக  ராமேஸ்வரம்-மதுரை இடையே அகல ரயில் போக்குவரத்து 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ல் துவங்கியது. பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப்பிறகு படிப்படியாக பழநி, உடுமலை, பொள்ளாச்சி வரை பாதைப்பணிகள் முடிவுற்றது.

இதையடுத்து மதுரை-பழநி இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் கடந்த ஆண்டு பொள்ளாச்சி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் பொள்ளாச்சி-பாலக்காடு இடையே பணிகள் முடிக்கப்பட்ட பின் திருச்செந்தூரில் இருந்து பழநி வரை இயக்கப்பட்ட பயணிகள் ரயிலை பாலக்காடு ரயில்வேகோட்டம் பாலக்காடு வரை நீட்டித்துள்ளது. ஆனால் பொள்ளாச்சி-போத்தனூர் இடையே 40 கி.மீ அகல ரயில் பாதை பணி முடிவடைந்தும் சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பயணிகள் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
ராமேஸ்வரத்தில் இருந்து பாலக்காடு, கோவைக்கு நேரடியாக இயக்கப்பட்ட ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டு 12 ஆண்டுகளாகியும் இவற்றை மீண்டும் இயக்க சிவகங்கை, ராமநாதபுரம் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதிகள் எந்தவித கோரிக்கையும் எழுப்பவில்லை. இதனால் தமிழகம் மட்டுமல்லாமது கேரள மாநில பயணிகளும் வேறுவழியின்றி அரசு பஸ்களையே நம்பியுள்ளனர்.

பத்தாண்டுகளுக்கு முன்புவரை ராமேஸ்வரத்தில் இருந்து கோவை, பாலக்காட்டிற்கு இயக்கப்பட்ட பயணிகள் ரயில்கள் சிவகங்கை, விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள பல கிராமமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் வசதியாக இருந்தது. இது தவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கோவைக்கும் கேரளாவிற்கும் கடல் உணவுகள் தினமும் சென்றன. மேலும் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து கோவை, பொள்ளாச்சி, பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் வேலைக்கு சென்றவர்களுக்கும் அடிக்கடி வந்து செல்ல வசதியாக இருந்தது. இந்நிலையில் கடந்த 2006ம் ஆண்டு முதல் அகலப்பாதை பணிக்காக கோவை, பாலக்காடு பயணிகள் ரயிலை நிறுத்திய ரயில்வே நிர்வாகம் அகலப்பாதை பணிகள் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகியும் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை  சேர்ந்த நடுத்தரக்குடும்பங்கள் சொந்தமாகவோ, வாடகைக்கோ வாகனங்களை அமர்த்தி செல்லமுடியாததால் அரசு பஸ்களைவிட்டால் வேறு வழியில்லை.

எனவே தற்போது மதுரையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாலை 4 மணிக்கும், மறுமார்க்கமாக இரவு 10 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கும் தினமும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ரயில்பயணி சேகர், ஆறுமுகம் கூறுகையில், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள், நடுத்தர குடும்பத்தினர் தொழில்நகரான கோவை, பொள்ளாச்சி, பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேலை செய்து வருகின்றனர். பத்தாண்டுகளுக்குமுன் தினமும் கோவை, பாலக்காடு வரை இயக்கப்பட்ட பயணிகள் ரயில்கள் மூலம் எளிதாக சென்று வந்தனர். அதே போல கேரளாவில் இருந்தும் ராமேஸ்வரம், ஏர்வாடி உள்ளிட்ட சுற்றுலாதலங்களுக்கு ஏராளமான யாத்ரீகர்கள் வந்து சென்றனர். எனவே கோவை, பாலக்காட்டில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் பயணிகள் ரயில்களையும், பொள்ளாச்சி-மதுரை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலையும் ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் என்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »