பந்தலூர்: பந்தலூர் அருகே பிதர்காடு முக்குப்பாடி ஆதிவாசி காலனியில் பாதுகாப்பற்ற குடியிருப்பால் ஆதிவாசி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பந்தலூர் அடுத்த நெலாக்கோட்டை ஊராட்சி பிதர்காடு முக்குப்பாடி ஆதிவாசி காலனியில் 10க்கும் மேற்பட்ட ஆதிவாசி குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் குடிசைகளாகவும், பிளாஸ்டிக் பயன்படுத்தி கூரைகள் அமைத்து பாதுகாப்பற்ற நிலையில் வசித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் ஆதிவாசி மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், அவை அனைத்தும் ஆதிவாசி மக்களுக்கு முழுமையாக சென்றடைவதில்லை என கூறப்படுகிறது.
அரசு அதிகாரிகள் அடிக்கடி ஆதிவாசி கிராமங்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாலும், அதன்பின் அதனை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதாக கூறுகின்றனர். அரசு திட்டங்கள் அனைத்தும் ஆதிவாசி மக்களுக்கு முழுமையாக சென்றடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் இப்பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்களுக்கு முறையான வீடு கட்டித்தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source: Dinakaran