Press "Enter" to skip to content

கலசபாக்கம் அருகே 4,560 அடி உயர பர்வதமலையில் தூய்மைப்பணி: மாவட்ட ஆட்சியர் உட்பட 2 ஆயிரம் பேர் பங்கேற்பு

கலசபாக்கம்:  கலசபாக்கம் அருகே 4560 அடி உயர பர்வதமலையில் கலெக்டர் தலைமையில் நேற்று தூய்மைப்பணி நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பகுதியில் பர்வதமலை உள்ளது. சுமார் 4,560 அடி உயரம் கொண்ட இம்மலையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மராம்பிகை சமதே மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயில் உள்ளது. சுமார் 13 கி.மீ. தூரமுள்ள இம்மலையை மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் கடலாடி, பட்டியந்தல், வேடப்புலி, வெள்ளந்தாங்கீஸ்வரர், வடகாளி அம்மன் கோயில் வழியாக கிரிவலம் வருகின்றனர்.

மேலும் மார்கழி மாதத்தில் இம்மலையில் தனுர் மாத உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த உற்சவத்தில் கோயில் மாதிமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சமேத கரைகண்டீஸ்வரர் கோயிலில் கிரிவலம் துவங்கும். இம்மலையில் உள்ள சுவாமிக்கு பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் பூஜை பொருட்களால், பூஜை செய்வதும் சிறப்புக்குரியதாகும். இந்நிலையில், நேற்று காலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் எம்எல்ஏ பன்னீர்செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள், பர்வதமலை பாதுகாப்பு குழுவினர் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

இதில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மக்களோடு மக்களாக சேர்ந்து 1,200 படிகட்டுகள் வரை தூய்மை பணிகளை மேற்கொண்டு குப்பைகளை சுமந்து சென்றார். இதில் ஆரணி ஆர்டிஓ மைதிலி, தாசில்தார் ராஜராஜேஸ்வரி, பிடிஓக்கள் அன்பழகன், மரியதேவ் ஆனந்த், ஒன்றிய குழு தலைவர் ஆர்.அன்பரசி, ஒன்றிய கவுன்சிலர் கலையரசி, ஊராட்சி தலைவர்கள் எழில்மாறன், பத்மாவதி, வித்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »