Press "Enter" to skip to content

தேங்காய் உற்பத்தி குறைவால் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள கயிறு உற்பத்தி தொழில்: தொழிலாளர்கள் வேதனை

புதுக்கோட்டை: தேங்காய் மட்டை கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் தேங்காய் நார் கயிறு தொழில் கடும் நெருக்கடியை சந்திக்க தொடங்கியுள்ளதால் அதனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேதனையடைந்துள்ளனர். இந்தியாவில் தயார் செய்யப்படும் தேங்காய் நார் கயிறுகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு. இந்தியாவில் தென்னை மரங்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. தேங்காய் நார் கயிறுகள் கட்டிடங்களுக்கு சாரம் அமைக்கவும், கிணறுகளில் இருந்து தண்ணீர் இறைக்கவும், வாழை மரங்களுக்கு முட்டு போடவும், கீற்று பந்தல் அமைக்கவும் மற்றும் வேலி அமைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ரகம் வாரியாக இதனை தயாரிக்கின்றனர். இதில் வாழைக்கன்றுகளுக்கு முட்டு போடுவதற்கான கயிறுக்கு அதிக கிராக்கி.

இந்நிலையில் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக கட்டிடங்களுக்கு சாரம் அமைக்க தற்போது இரும்பு பைப்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கயிறுகள் பயன்படுத்தப்படும் வழக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதன்பிறகு தேங்காய் நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்பட்டு ஜியோ டெக்ஸ்டைல்ஸ் மேட்கள் போன்றவை தயார் செய்யப்பட இந்த தொழிலுக்கான எதிர்காலம் பிரகாசமானதாக மாறிவிட்டது. மண் அரிப்பை தடுக்கும் கேக் மற்றும் பழத் தோட்டங்களில் கொடிகள் படர்வதற்கும் பயன்படுகிறது. இந்த தயாரிப்புகள் அனைத்தும் ஏற்றுமதி சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. உலகளவில் சிந்தெடிக் மெட்டீரியல் மூலம் தயாரித்த பொருட்களுக்கு பதில் தேங்காய் நார் மூலம் தயாரிப்பது தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் உலகளவில் இந்த பொருளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் இந்த தொழில் கிடையாது என்பதோடு, அங்கு ஆரம்பித்தால் அதிக செலவு ஏற்படும் என்பது நமக்கிருக்கும் கூடுதல் பலம்.

இந்த தொழிலுக்கு தேவையான அனைத்து இயந்திரங்களும் தமிழகத்திலேயே கிடைக்கிறது. அதேநேரத்தில் சிலர் தேங்காய் நார் வாங்கி வந்து கைராட்டை மூலம் கயிறு தயாரிக்கும் பணியை இன்று வரை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு தேங்காய் நார்தான் இதன் முக்கிய மூலப்பொருள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தென்னை மரங்கள் அதிகளவில் இருந்தது. தேங்காய்களில் இருந்து பிரித்து எடுக்கப்படும் தேங்காய் மட்டைகளை அதிகம் வாங்கி சென்று கயிறு திரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்றும் வாழ்ந்து வருகிறது. தேங்காயை உரித்து பிறகு தேங்காய் மட்டையை நன்கு காயவைத்து அதில் இருக்கும் நார்களை மிஷின் வைத்து தனியாக பிரித்தெடுத்து, அதனை மதிப்பு கூட்டப்பட்டு லாட் லாட்டாக விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் வீசிய கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்னை மரங்கள் மட்டுமின்றி மக்களுக்கு அதிக பயன்தரக்கூடிய பல்வேறு வகையான ஆயிரக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதில் தென்னை மரங்கள் அதிகளவில் முறிந்து விட்டது.
இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தி மிகவும் குறைந்துவிட்டது. இதனால் தேங்காய் மட்டை கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாதிப்படையாத ஒரு சில தென்னை மரங்களில் காய்க்கும் தேங்காய்களை வைத்து தற்போது கயிறு தொழில் செய்து வருகின்றனர்.
இதனால் வீட்டிற்கு தேவையான தேங்காய்கள் கூட விவசாயிகள் நகர் புறங்களில் உள்ள கடைகளுக்கு சென்று வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி பல காரணங்களால் தேங்காய் நார் தயாரிக்க தேவையான தென்னை மட்டை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதேவேளையில் அதனை நம்பியுள்ள விவசாயிகளும் பாதிப்புள்ளாகியுள்ளனர். நாளுக்கு நாள் தேங்காய் மட்டைகளுக்கு தட்டுப்பாடு நீடித்து வருவதால் இதனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கானோர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த பாதிப்புக்கள்ளான தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் போதிய இழப்பீடு அல்லது உதவிதொகைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »