Press "Enter" to skip to content

திண்டுக்கல்லில் 6 வயது சிறுமி தோட்டத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக உறவினர்கள் சாலை மறியல்

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள ரங்கநாதபுரத்தை சேர்ந்த,  நாகேந்திரன் – பாண்டீஸ்வரி தம்பதியினர்.  இவர்கள் இருவரும் அருகில் உள்ள நூற்பாலையில் வேலை செய்து வருகின்றனர்.  இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அவர்களின் மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று ஞாயிற்று கிழமை என்பதால், சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தாள். அப்பொழுது திடீரென்று சிறுமி மாயமான நிலையில் உறவினர்கள் ஊர் முழுவதும் சிறுமியை தேடியுள்ளனர்.

சிறுமியை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அதே பகுதியில் இருந்த உமாசங்கர் என்பவரின் தோட்டத்தில் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் டிராக்டர் வாகனத்தின் அடியில் சிறுமியின் உடல் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர்,  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமெனவும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு, சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் சுமார் ஒரு மணிநேரம் திருச்சி- திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து,  போலீசார் குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை பெற்று தருவதாக உறுதியளித்ததையடுத்து,  சாலை மறியல் கைவிடப்பட்டது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »