மதுரை: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பழநிக்கு கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என ரயில்வே பயணிகள் நல சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இந்தாண்டு தைப்பூச திருவிழா வரும் 8ம்தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியில் கூடுவர். இதனால் பிப்.7, 8 ஆகிய தேதிகளில் பழநிக்கு வரும் அனைத்து பஸ்கள் மற்றும் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். பயணிகள் நெரிசலை தவிர்க்க, பிப்.8ம் தேதி மதுரை-பழநி மார்க்கத்தில் ஒரு ரயில், கோவை-பழநி மார்க்கத்தில் பிப்.2 முதல் 12 வரை ஒரு பயணிகள் ரயில் என 2 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில்கள் பயணிகள் நெரிசலை குறைத்துவிடாது. எனவே சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க வேண்டும் என்று தென்னக ரயில் பயணிகள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சங்க நிர்வாகிகள் கூறுகையில், “இந்த 2 ரயில்களால் பயணிகள் நெரிசலை 20 சதவீதம் கூட குறைக்க முடியாது. மேலும் காரைக்குடி, ராமநாதபுரம், தேனி, சேலம் போன்ற பகுதிகளிலிருந்து பழநிக்கு வரும் பக்தர்கள் கூட்டம் கணிசமாக இருக்கும். எனவே மேற்கூறப்பட்ட இடங்களிலிருந்து, பழநி மார்க்கத்தில் பிப். 7, 8 ஆகிய 2 தினங்களாவது சிறப்பு ரயில்களை இயக்கி, நெரிசலை குறைக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க ேவண்டும்’’ என்றனர்.
Source: Dinakaran