Press "Enter" to skip to content

தமிழர்களின் விரோதி… பாஜகவுக்கு பல்லக்கு தூக்கும் ரஜினி… ஜாம்பவான் மீது செம காண்டான அழகிரி!

தமிழர்களின் விரோதியாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் நடிகர் ரஜினி. எனவே, தமிழக அரசியலில் வகுப்புவாத பாஜகவுக்கு பல்லக்கு தூக்குவதற்கு ரஜினிகாந்த் தயாராகிவிட்டார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் சிஏஏ சட்டம் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு ஆபத்து இல்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு மிகவும் முக்கியமான ஒன்று. அரசியல் கட்சிகள் தங்களுடைய ஆதாயத்துக்காக இஸ்லாமியர்களைத் தூண்டிவிடுகிறார்கள். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் முன் ஆராய வேண்டும்’ என்று தெரிவித்தார். அவருடைய இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.


ரஜினியின் கருத்து தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்த நடிகர் ரஜினி, இதனால் நாட்டு மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, அரசியல் கட்சிகள் மக்களிடையே தவறான பிரசாரத்தின் மூலம் பீதியைக் கிளப்பி வருகிறார்கள் என்று கருத்து கூறியிருக்கிறார். எப்படியோ பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ரஜினி யார் என்பதை அடையாளம் காட்டுவதற்கு இக்கருத்து ஒன்றே போதும்.

 
ஆன்மீக அரசியல் என்ற முகமூடி இன்றைக்கு கிழித்தெறியப்பட்டிருக்கிறது. மதங்களை பிளவுபடுத்துவதுதான் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலா ? சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகு நீ எந்த மதத்தைச் சார்ந்தவன் ? உன் தந்தை எந்த மதத்தைச் சார்ந்தவன் ? நீ எங்கே பிறந்தாய் என்று ரிஷிமூலம், நதிமூலம் கேட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுவதுதான் ஆன்மீக அரசியலா ? 
குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து பேசுகிற ரஜினிகாந்தை தமிழக மக்கள் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பை அவரே வழங்கியிருக்கிறார். அவர் யார் என்பது இப்போது தெரிந்துவிட்டது. இதன்மூலம் தமிழர்களின் விரோதியாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். எனவே, தமிழக அரசியலில் வகுப்புவாத பாஜகவுக்கு பல்லக்கு தூக்குவதற்கு ரஜினிகாந்த் தயாராகிவிட்டார்.  ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் முகமூடி இன்றைக்கு அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. ரஜினியை நடிகராக பார்த்த மக்கள், பாஜகவின் ஊதுகுழலாக பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »