Press "Enter" to skip to content

ஆதார், குடியுரிமைக்கான ஆவணம் அல்ல – தனித்துவ அடையாள ஆணையம் விளக்கம்

ஆதார், குடியுரிமைக்கான ஆவணம் அல்ல என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி:

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ.), அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் எண் வழங்கி வருகிறது.

இதற்கிடையே, தெலுங்கானா மாநிலத்தில் 127 பேர் போலி ஆவணங்களை கொடுத்து ஆதார் பெற்றதாக மாநில போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றும் பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஐதராபாத்தில் உள்ள தனித்துவ அடையாள ஆணைய அதிகாரியிடம் போலீசார் புகார் அளித்தனர். அதன்பேரில், 127 பேரும் விசாரணைக்கு நேரில் வருமாறு ஆணைய அதிகாரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக வெளியான செய்தியில், குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதார் எண் கொடுத்த பிறகு, அதுபற்றி விசாரணை நடத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்த செய்தி சரியான பார்வையில் வெளியிடப்படவில்லை. ஆதாருக்கும், குடியுரிமை விவகாரத்துக்கும் சம்பந்தம் இல்லை.

ஆதார் என்பது குடியுரிமைக்கான ஆவணம் அல்ல. ஒருவர் ஆதாருக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் 182 நாட்களாவது இந்தியாவில் வசித்துள்ளாரா என்பதை உறுதி செய்வது ஆதார் சட்டப்படி இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் வேலை என்று கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு ஆதார் அளிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது.

போலி ஆவணங்களை கொடுத்து ஆதார் பெற்றதாக வந்த புகாரின்பேரில், ஐதராபாத் அதிகாரி 127 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதுபோல், போலி ஆவணங்கள் கொடுத்து பெறப்பட்ட ஆதாரை ரத்து செய்ய முடியும். ஆகவே, விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

127 பேரும் அளிக்கும் பதில்கள் ஆய்வு செய்யப்படும். அவர்கள் போலி ஆவணங்கள் கொடுத்தது உறுதி செய்யப்பட்டால், அவர்களது ஆதார் எண் ரத்து செய்யப்படும் அல்லது முடக்கி வைக்கப்படும்.

குடியுரிமை விவகாரத்துக்காக இந்த நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. ஒருவரின் குடியுரிமைக்கும், ஆதாரை ரத்து செய்வதற்கும் சம்பந்தம் இல்லை. ஒருவர் போலி ஆவணங்களையோ, போலி உடற்கூறுகளையோ அளித்து ஆதார் பெற்றதாக தெரிய வந்தால், அவர்களது ஆதார் எண்ணை ரத்து செய்ய வேண்டியதாகி விடுகிறது. இது, அடையாள ஆணையம் மேற்கொள்ளும் வழக்கமான நடவடிக்கைதான்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »