அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையால் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அவர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதையொட்டி டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, போக்குவரத்து கட்டுப்பாடுகளையும் காவல்துறை விதித்துள்ளது. இதன் காரணமாக மத்திய டெல்லி உள்ளிட்ட சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்படலாம்.
இன்று (செவ்வாய்) முற்பகல் முதல் மாலை 4 மணி வரை, மோதி பாக், சாணக்யபுரி, இந்தியா கேட், ஐ.டி.ஓ, டெல்லி கேட் மற்றும் மத்திய மற்றும் புதுடெல்லி பகுதிகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படலாம்.
இன்று மாலையில் சாணக்யபுரி, ஆர்.எம்.எல் மருத்துவமனை ரவுண்டானா, தவ்லா கான், டெல்லி கண்டோன்மென்ட், டெல்லி-குர்கான் சாலை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும். எனவே அதற்கு ஏற்ப வாகன ஓட்டிகளும் பயணிகளும் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு டெல்லி போக்குவரத்து காவல்துறை வலியுறுத்தி உள்ளது.
மேலும், சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது மோதல் ஏற்பட்டதால் இன்று அந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றும் மாஜ்பூர் மற்றும் பிரகாம்புரியில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே, அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரகாம்புரியில் வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
Related Tags :
Source: Maalaimalar