Press "Enter" to skip to content

டெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு

டெல்லியில் நடந்த வன்முறையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் இறந்ததையடுத்து, வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி:

டெல்லி வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து ஒரு சாரார் ஊர்வலம் நடத்தினார்கள்.

இதற்கு அந்த பகுதி முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அந்த மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. வீடுகள், கடைகள் மற்றும் பொது சொத்துக்களுக்கு தீவைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வீடுகள், வாகனங்கள் எரிக்கப்பட்டன. சரமாரியாக கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன.

சில இடங்களில் கலவரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் வடகிழக்கு டெல்லியில் கலவரமும், பதட்டமும் மேலும் அதிகரித்தது. அடுத்த 2 நாட்களும் (திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை) கலவரம் நீடித்தது.

கலவரத்தில் 210-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்தவர்களில் 30 சதவீதம் பேர் குண்டு காயம் அடைந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

அவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி நேற்றும், இன்று காலையிலும் உயிரிழந்தனர். இதனால் டெல்லி கலவர பலி உயர்ந்தபடி உள்ளது. நேற்று மதியம் வரை கலவரத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 25 ஆக இருந்தது.

இன்று (வியாழக்கிழமை) காலை பலியானவர்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்தது. இந்தநிலையில் மருத்துவமனைகளில் இருந்தவர்களில் மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது காலை 9 மணிக்கு தெரியவந்துள்ளது. இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

கலவரம் தொடராமல் இருப்பதற்காக டெல்லி வடகிழக்கு பகுதியில் துணை நிலை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கலவரப் பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நேற்று பெரிய அளவில் மோதல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை.

கலவரம் தொடர்பாக டெல்லி போலீசார் 18 வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஏராளமானவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையில் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. அவர்களில் 106 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முதலே டெல்லி வடகிழக்கு பகுதியில் ஒரு வித இறுக்கமான அமைதி நிலவியது. கலவரம் நடந்த பகுதிகளில் மக்கள் இன்றும் சற்று பதட்டத்துடன் காணப்பட்டனர். புதிதாக மோதல் ஏற்படாததால் மக்கள் மத்தியில் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.

கலவர பகுதிகளில் நேற்று மாலை டெல்லி முதல்- மந்திரி கெஜ்ரிவால் மக்களை சந்தித்து பேசினார். அமைதி காக்கும்படி அவர் பொதுமக்களை கைகூப்பி கேட்டுக்கொண்டார். கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

கலவரம் அதிக அளவில் நடந்த ஜாப்ராபாத், மவ்ஜிபூர், சந்த்பாக், கர்வல்நகர் ஆகிய பகுதிகளில் தீவைத்து எரிக்கப்பட்ட வாகனங்கள் இன்னமும் அகற்றப்படவில்லை. தீவைத்து எரிக்கப்பட்ட வீடுகளும் அப்படியே உள்ளன. இதனால் அந்த பகுதிகள் போர்க்களம் போல காட்சியளிக்கின்றன.

கலவரத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட சந்த்பாக் பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் வாழ்கிறார்கள். அங்கு இன்று காலை மயான அமைதி நிலவியது. அங்குள்ள இந்துக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

கர்வல் நகர் பகுதியில் நிறைய முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். அவர்களில் 60 குடும்பத்தினர் நேற்று போலீசார் உதவியுடன் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

இதுகுறித்து ரக்சனா என்ற பெண் கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக நான் இந்த பகுதியில் வசித்து வருகிறேன். இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதர மனப்பான்மையுடன் தான் பழகி வருகிறோம். திடீரென இப்படி ஒரு கலவரம் ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது” என்றார்.

சில இடங்களில் முஸ்லிம்களை போலீசாரே பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை பா.ஜனதா தலைவர் கபில் மிஸ்ரா டுவிட்டரில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததும், கலவரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை தகவல் கொடுத்தது. அதை டெல்லி போலீசார் கண்டு கொள்ளவில்லை.

அடுத்தடுத்து 6 தடவை உளவு அமைப்புகள் எச்சரிக்கை தகவலை கொடுத்தனர். அப்போதே டெல்லி போலீசார் உஷாராகி நடவடிக்கை எடுத்திருந்தால் கலவரத்தை தடுத்து இருக்க முடியும் என்று கூறப்படுகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »