அரியானாவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
சண்டிகர்:
அரியானா மாநிலம் ஜாஹர் மாவட்டம் பகதூர்ஹர் என்ற நகரத்தில் ஒரு ரசாயன தொழிற்சாலை அமைந்துள்ளது. அந்த தொழிற்சாலையில் 30-க்கும் அதிகமானோர் வேலை செய்துவந்தனர்.
இந்நிலையில் தொழிலாளர்கள் நேற்று வழக்கம்போல வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ரசாயன தொழிற்சாலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து காரணமாக தொழிற்சாலை முழுவதும் தீ பற்றி எரிந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.
ஆனாலும், இந்த விபத்தில் சிக்கி தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண்கள் குழந்தைகள் உள்பட 28 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Source: Maalaimalar