Press "Enter" to skip to content

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் வாழ்நாள் தடை

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்தால் வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை:

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதில் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு வருகிற 2-ந்தேதி தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில் பொதுத்தேர்வுகளில் முறைகேடு செய்தால் தேர்வர்களுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன? என்பது குறித்து அரசு தேர்வுத்துறை விளக்கம் அளித்து இருக்கிறது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உ‌ஷாராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* தேர்வு அறையில் அன்றைய தேர்வு தொடர்பான புத்தகம், நோட்ஸ், துண்டு சீட்டு வைத்திருந்து தானாக முன்வந்து ஒப்புக்கொண்டால், அந்த தேர்வரை தலைமை கண்காணிப்பாளர் எச்சரித்து, அவரிடம் விளக்கம் எழுதி வாங்குவார்.

* தேர்வர் மற்றொரு தேர்வரை பார்த்து காப்பி அடித்தாலோ அல்லது தேர்வு அறையில் இருந்தோ, வெளியில் இருந்தோ வேறொருவரிடம் இருந்து உதவி பெற்றாலோ அவர் அந்த தேர்வில் தகுதிநீக்கம் செய்யப்படுவதுடன், ஓராண்டு தேர்வு எழுத தள்ளிவைக்கப்படுவார்.

* தடை செய்யப்பட்ட ஆவணங்களை கொண்டு காப்பி அடித்தால், அந்த பகுதிக்கான மதிப்பெண் ரத்து செய்யப்படுவதோடு, தேர்வர் அடுத்த 2 ஆண்டுகள் தேர்வுகளை எழுதவும் தடைசெய்யப்படுவர்.

* ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த தேர்வர் தகுதிநீக்கம் செய்யப்படுவதுடன், வாழ்நாள் தேர்வு எழுதவும் தடைவிதிக்கப்படும்.

* வினாத்தாளை முன்கூட்டியே வெளியிட்டது கண்டறியப்பட்டால், தேர்வுக்கான தகுதிநீக்கம் செய்யப்படுவதோடு, 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுதவும் தடைவிதிக்கப்படும்.

* விடைத்தாளில் வரிசை எண்ணை மாற்றி குறிப்பிட்டு கொடுத்தாலோ, மற்ற தேர்வரின் விடைத்தாள்களை மாற்றிக்கொள்வது கண்டறியப்பட்டாலோ அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவதுடன், 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாமல் தள்ளிவைக்கப்படுவார்.

* வினாத்தாளில் விடை எழுதி மற்றொரு தேர்வருக்கு தூக்கி எறிவது கண்டறிந்தால், அந்த தேர்வர்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »