Press "Enter" to skip to content

வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்கும் திட்டத்துக்கு தேர்தல் கமிஷன் ஆதரவு இல்லை

வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்கும் திட்டத்துக்கு தேர்தல் கமிஷன் ஆதரவு இல்லை என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி:

தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்க வேண்டும் என்ற பரிந்துரை நீண்ட காலமாக உள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடமும் அனுமதி கோரப்பட்டு உள்ளது. ஆனால் இந்த திட்டத்துக்கு தேர்தல் கமிஷன் ஆதரவு அளிக்கவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

பாராளுமன்ற மக்களவையில் நேற்று இது தொடர்பான கேள்விகளுக்கு நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்றால், அதற்கு மேலாக வேட்பாளரோ அல்லது மற்றவர்களோ செலவு செய்வதை தடுக்கவோ, அல்லது அதை பரிசோதிக்கவோ முடியாது என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இதனால் வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்கும் திட்டத்துக்கு அது ஆதரவு அளிக்கவில்லை.

அதேநேரம் அரசியல் கட்சிகள் நிதி பெறும் வழிமுறைகள் மற்றும் அந்த நிதியை செலவிடுவதில் வெளிப்படைத்தன்மையை பின்பற்றுவதில் தீவிர மாற்றம் இருக்க வேண்டும் என்பதே தேர்தல் கமிஷனின் கருத்தாக உள்ளது.

இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் ரொக்கப்பரிமாற்றத்தை குறைக்கவும், வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்கவும் அரசு வருமான வரிச்சட்டத்தை திருத்தி இருப்பதுடன், ரொக்கப்பரிமாற்றத்தை வெறும் ரூ.2 ஆயிரமாக குறைத்தும் இருக்கிறது. மேலும் அரசியல் கட்சிகள் நிதி திரட்டுவதில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிப்பதற்காக ‘தேர்தல் பத்திரம் திட்டம் 2018’-ம் அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இவ்வாறு அனுராக் தாக்குர் தெரிவித்தார்.

கடந்த 3 ஆண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டில் வருமானவரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து இருப்பதாக மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கும்போது அனுராக் தாக்குர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »