இந்தியாவுக்கு சுற்றுலா வந்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிக்கிக்கொண்டிருந்த ஜெர்மனி நாட்டினர் தங்கள் சொந்த நாட்டிற்கு புறப்பட்டுச்சென்றனர்.
புதுடெல்லி:
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 606 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. மேலும், இந்த வைரசுக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் உள்நாடு, வெளி நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதாலும் இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டு பயணிகள் சொந்த நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விமான சேவைகள் ரத்து, ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் சிக்கித்தவித்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளை அந்நாடு தனி விமான மூலம் மீட்டுள்ளது.
ஜெர்மனி நாட்டினரை மீட்க அந்நாட்டு அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து சுமார் 500 சுற்றுலா பயணிகள் இன்று டெல்லியில் இருந்து ஜெர்மனி நாட்டின் தனி விமானம் மூலம் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Related Tags :
Source: Maalaimalar