கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்றுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்கள் பசியால் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசி, அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். வீட்டுக்கு ஒரு கிலோ பருப்பும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம், உணவில்லாமல் யாரும் பாதிக்கப்படாத நிலை ஏற்படும். இந்த திட்டங்களின் அடிப்படையில், பொருட்கள் 2 தவணையாக வழங்கப்படும்
சுகாதாரத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ரூ.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு செய்யப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்தில் மருத்துவ காப்பீடு செய்யப்படும்.
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் வழங்கப்படும் நிலையில், அதில் முதல் தவணையாக 2000 ரூபாய் உடடினயாக வழங்கப்படும். கிசான் யோஜனா திட்டத்தின் இந்த தொகை வழங்கப்படும். இதன்மூலம் 8.69 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.
முறைசாரா தொழிலாளர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறுவர். 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்த்தப்படும்.
யாரும் பசி, பட்டினியோடு இருந்து விடக்கூடாது என்பதற்காக உதவிகள் அவர்கள் வங்கி கணக்கிலேயே வழங்கப்படும்
விவசாயிகள், விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும். விதவைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும். 20 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்கின் கீழ், மாதம் தோறும் 500 ரூபாய் என அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Source: Maalaimalar