Press "Enter" to skip to content

கமல் ஹாசன் வீட்டில் கொரோனா அறிவிப்பு ஒட்டப்பட்டதால் சர்ச்சை

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனின் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்களுக்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இவ்வாறு சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் ஹாசனின் வீட்டில் நேற்று இரவு கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டது. சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள வீட்டில் மாநகராட்சி ஊழியர்கள் இந்த நோட்டீசை ஒட்டியுள்ளனர். அதில், கொரோனாவில் இருந்து எங்களைக் காக்க, சென்னையைக் காக்க, எங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம் என கூறப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மய்யத்தை ஓரம் கட்ட முயற்சி என கட்சியினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீசை அகற்றினர்.

கமல் வீட்டில் வேலை செய்தவர்களில் யாரோ ஒருவர் வெளிநாடு சென்று வந்ததால், அவரது பாஸ்போர்ட் முகவரியின் அடிப்படையில் அந்த வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கமலின் பழைய முகவரி என தெரியாமல் நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது. முகவரியில் ஏற்பட்ட குழப்பத்தால் சிறிய தவறு நடந்திருப்பதாக மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »