Press "Enter" to skip to content

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேதம் உதவுகிறது- நிபுணர்கள் கருத்து

கொரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருத்துவம் உதவுகிறது என நிபுணர்கள் கூறி உள்ளனர்.

புதுடெல்லி:

உலகமெங்கும் பரவி வருகிற கொரோனா வைரசை குணப்படுத்த எந்தவொரு மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் சர்வதேச அளவில் மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக போரிடுவதில் நோய் எதிர்ப்புசக்தியை பெருக்கிக்கொள்ளவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்து உள்ளனர்.

அந்த வகையில் இந்தியாவின் பழமையான ஆயுர்வேத மருத்துவம், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதுபற்றி அவர்கள் கூறுகையில், “ஆயுர்வேத மூலிகை பொருட்களான துளசி, லவங்கப்பட்டை, கருப்பு மிளகு, சுக்கு, உலர் திராட்சை ஆகியவற்றை சாப்பிடுவதும், வழக்கமான யோகா பயிற்சி செய்வதும் கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்” என்று குறிப்பிட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில், ஆயுர்வேத மருத்துவத்தின் நன்மைகளை எடுத்துரைத்ததுடன், உடலை நல்ல ஆரோக்கிய தகுதியுடன் வைத்துக்கொள்வதற்கு மக்கள் அதை பயன்படுத்தி பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதும், நல்ல ஆரோக்கியமே மகிழ்ச்சியைத் தூண்டுகிறது என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.

ஆயுஷ் துறை அமைச்சகமும், சுடுதண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் 30 நிமிடம் யோகாசனம் செய்ய வேண்டும், மூச்சுப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும், தியானம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கூறியதும் நினைவுகூரத்தக்கது.

மஞ்சள், சீரகம், கொத்தமல்லி மற்றும் பூண்டு ஆகியவற்றை சமையலில் பயன்படுத்துவது கொரோனா வைரசுக்கு எதிராக செயல்படுவதில் உதவியாக இருக்கக்கூடும் எனவும் கூறியது. அத்துடன் காலையில் 10 கிராம் ஸ்யாவன் பிராஷ் (நெல்லிக்காய் லேகியம்) எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. வெல்லமும், எலுமிச்சை சாறும் சேர்த்து பருகுவதும் கொரோனா வைரசுக்கு எதிராக வேலை செய்யும் என கூறப்பட்டது.

ஏஐஎம்ஐஎல் பார்மா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சித் சர்மா, பிரதமர் மோடியின் கருத்தை வரவேற்றார். கொரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்புசக்தி, மீட்பராக இருக்கும் என்று குறிப்பிட்டார். இவரது நிறுவனம் நோய் எதிர்ப்புசக்தியைப் பெருக்கும் வகையில் துளசி உள்ளிட்ட பல்வேறு ஆயுர்வேத மூலிகைகளை கொண்டு பிபாட்ரால் என்ற மருந்தை தயாரித்து வழங்குகிறது.

இந்த மருந்தில் பயன்படுத்தப்படுகிற மூலிகைகள், நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கவும், பெருக்கவும் இன்டர்பிரான் புரதச்சத்து மற்றும் ஆன்டிபாடிகள் என்னும் நோய் எதிர்ப்பு பொருள், நுண்ணுயிரிகளை அழிப்பதற்கான பாகோசைட்டோசிஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாகவும், இது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதுடன், நுண்ணுயிரி தொற்றுகளை அழிப்பதாகவும் சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பின் முன்னாள் விஞ்ஞானியான ஏ.கே.எஸ். ராவத் கூறி உள்ளார்.

கொரோனா வைரஸ் என்ற எதிரியை எதிர்த்து போராடுகிற அளவுக்கு உடல் வலிமை இல்லாதபோது, 150 மில்லி சூடான பாலில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூளை கலந்து தினமும் ஒன்றல்லது இரண்டு முறை பருகுவதும், காலை- மாலை என இருவேளை மூக்கின் இரு துவாரத்திலும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது நெய் சில சொட்டுகளை ஊற்றுவதும் உங்களை கவசமாக பாதுகாக்கும் என்று ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »