தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வரும் 11-ந்தேதி முதல் டீக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மே 17-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில இடங்களில் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் டீக்கடைகளை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அத்தியாவசிய பொருட்களாக காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வரும் 11-ந்தேதி முதல் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. பார்சலுக்கு மட்டுமே அனுமதி. டீ கடைகளில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பம்புகள் 24 மணிநேரமும் செயல்படும்.
பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
மேலும் அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து முழுமையாக கடைபிடிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Source: Maalaimalar