இரண்டாம் கட்ட மீட்பு பணியின்போது 30 ஆயிரம் இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அதன் காரணமாக விமான சேவைகள் முடங்கின.
வெளிநாடுகளில் சிக்கித் தவித்து, தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களை படிப்படியாக மீட்டு அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி கடந்த 7-ம் தேதி முதல் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் மத்திய அரசு அழைத்து வருகிறது.
பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 64 விமானங்கள் தயார்படுத்தப்பட்டு அவர்களை மீட்டு அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இரண்டாம் கட்ட மீட்பு பணியின்போது 30 ஆயிரம் இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, விமான போக்குவரத்துத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வரும் திட்டத்தின் முதல் கட்டத்தில் 14 ஆயிரத்து 800 பேர் அழைத்து வரப்பட்டனர்.
இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணி 16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை மேற்கொள்ளப்படுகிறது. இதில் 31 நாடுகளுக்கு 149 விமானங்கள் இயக்கப்படும். அதில் 30 ஆயிரம் இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என தெரிவித்தார்.
Related Tags :
Source: Maalaimalar