இந்திய வான்பரப்பை விமானங்கள் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு ‘தன்னிறைவு இந்தியா’ என்ற பெயரில் பல கட்டங்களாக நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
கடந்த மூன்று கட்ட அறிவிப்புகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயம் உள்பட பல்வேறு துறைகளுக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் தன்னிறைவு இந்தியா பொருளாதார சிறப்பு திட்டங்களின் நான்காம் கட்ட அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
இந்திய வான்பரப்பை விமானங்கள் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
சீர்திருத்தங்கள் மூலமாக விமானங்களை இயக்குவதற்கான செலவை ரூ.1000 கோடி வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சில ராணுவத் தளவாடங்களை உள்நாட்டில் மட்டுமே உற்பத்தி செய்யும் வகையில் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும்.
குறிப்பிட்ட சில தளவாடங்கள் பட்டியலிடப்பட்டு அவை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும்.
ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் நிறுவனங்களாக மாற்றப்படும்.
ராணுவ தளவாடங்கள் இறக்குமதி மசோதா விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்திய வான்பரப்பை பயன்படுத்துவதில் இருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் விமான நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி மிச்சமாகும்.
விமானங்களை பராமரிக்கும் தளங்களை இந்தியாவிலேயே அமைக்க சலுகைகள் வழங்கப்படும்.
விமான நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான பணிகள் அரசு, தனியார் ஒருங்கிணைப்புடன் நடத்தப்படும்.
மேலும் 6 விமான நிலையங்களில் தனியார் முதலீடு அனுமதிக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Source: Maalaimalar