தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 4-வது முறையாக மே 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 12-ந்தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஜூன் 15-ந்தேதி முதல் ஜூன் 25-ந்தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
Related Tags :
Source: Maalaimalar