உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி பிரமுகர் மகனுடன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் சாம்பல் மாவட்டத்தில் உள்ள சாம்சோயி கிராமத்தைச் சேர்ந்தவர் சோட் லால் திவாகர். சமாஜ்வாடி கட்சியின் முக்கிய பிரமுகரான இவர் கடந்த 2017-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அந்த தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் இவர் போட்டியிடவில்லை.
தற்போது இவரது மனைவி அந்த கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று திவாகரும், அவரது மகன் சுனிலும் அந்த கிராமத்தில் அமைக்கப்பட்ட சாலையை பார்வையிடசென்றனர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சாலையை இருவரும் பார்வையிட்ட போது, அதேபகுதியை சேர்ந்த சிலர் திவாகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில் வாக்கு வாதம் முற்றி மோதலாக மாறியது. அப்போது திடீரென 2 பேர் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் திவாகர், சுனில் ஆகியோரை சுட்டுக்கொன்றனர்.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திவாகர், சுனில் ஆகியோரை சுட்டுக் கொன்றதில் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த ரவுடி சவீந்தர் என்பது தெரிய வந்தது. தப்பி ஓடிய சவீந்தரையும், அவனது கூட்டாளியையும் போலீசார் கைது செய்தனர்.
சாலை அமைக்கும் தகராறில் இந்த கொலைகள் நடந்தது தெரிய வந்தது. தொடர்ந்து இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சவீந்தரும், அவனது கூட்டாளியும் துப்பாக்கியால் திவாகரை மிரட்டுவதும், அவர்களை நோக்கி சுடுவதுமான வீடியோ காட்சிகள் அப்பகுதியில் வைரலாக பரவி வருகிறது.
Related Tags :
Source: Maalaimalar