ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ஜம்மு:
மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அடுத்த பாண்டச் சவுக் பகுதியில் 37 பட்டாலியனைச் சேர்ந்த 2 எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று மாலை 5 மணியளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த பயங்கரவாதிகள் சிலர் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் சம்பவ இடத்திலேயே ஒரு வீரர் வீரமரணம் அடைந்தார். மற்றொரு வீரர் காயங்களுடன் ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததாக பிஎஸ்எப் அதிகாரி கூறினார்.
பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Source: Maalaimalar