டெல்லியில் இருந்து ஊட்டி வந்த திமுக எம்.பி ஆ.ராசா தன்னைத்தானே 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டார்.
ஊட்டி:
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பஸ், கார், விமானம், ரெயில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் நடந்த பாராளுமன்ற கூட்ட தொடர் முடியும் போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஆ.ராசா எம்.பியால் தமிழகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு பஸ், ரெயில், உள்நாட்டு விமானசேவை தொடங்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை விமானம் மூலம் ஆ.ராசா எம்.பி. கோவை வந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டது.
இதையடுத்து அவர் காரில் நீலகிரி மாவட்டம் ஊட்டி ஹில்பங்க் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் வெளியூரில் இருந்து வந்ததால் தன்னைத்தானே 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டார். இதற்கிடையே ஆ.ராசா எம்.பி ஊட்டிக்கு வந்த தகவலை அறிந்த சுகாதாரத்துறையினர் ஹில்பங்க் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். பின்னர் அவருக்கு காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்த தெர்மல் மீட்டரை வைத்து சோதனை செய்தனர். மேலும் அவரது வீட்டின் முன்பு தனிமைப்படுத்தப்பட்டதற்கான ஸ்டிக்கரையும் ஒட்டி சென்றனர்.
Related Tags :
Source: Maalaimalar