Press "Enter" to skip to content

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் வீடு வீடாகப் பரிசோதனை செய்ய வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்த வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கொரோனா நோய்த் தொற்றால் தலைநகர் சென்னை மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 256 பேர் என்றால், அதில் சென்னையில்  மட்டும் 18 ஆயிரத்து 693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுவும் ராயபுரம் மண்டலத்தில் 3224 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2093 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில்  2029 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 2014 பேரும், திரு.வி.க.நகர் மண்டலத்தில்  1798 பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த எண்ணிக்கை மிக மிக அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய பெரிய மாநிலங்களில் முழுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை விட, சென்னை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்பதை அரசாங்கம் உணர்ந்ததா எனத் தெரியவில்லை.

கேரளா, அசாம், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை விட ராயபுரம் என்ற ஒரு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பது மிக மிக அதிகம் என்பதையும் தமிழக அரசாங்கம் உணர்ந்ததா எனத் தெரியவில்லை.
கொரோனாவை மற்ற மாவட்டங்களில் கட்டுப்படுத்திவிட்டோம்,’ என்றும், ‘பலியானவர் எண்ணிக்கை குறைவு’ என்றும் தனக்குத் தானே மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர் பழனிசாமி, சென்னையில் 5 மண்டலங்கள் முழுமையாக கொரோனா மண்டலங்களாக மாறிவிட்டதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?.

உரிய சோதனைகள் உடனடியாகச் செய்யப்படுவது இல்லை; சோதனை முடிவுகள் உடனே சொல்லப்படுவதில்லை; மரணங்கள் அனைத்தும் ஐந்து நாட்கள் கழித்துத்தான் அறிவிக்கப்படுகின்றன; கொரோனா மரணங்களாக இல்லாமல் வேறு நோய்கள் சொல்லப்படுகின்றன – இப்படி பல்வேறு சந்தேகங்களை மக்கள் எழுப்பி வருகிறார்கள்.

இவை எதற்கும் முதலமைச்சரோ, அமைச்சரோ, உயர் அதிகாரிகளோ உரிய பதிலைச் சொல்வது இல்லை. தினமும் பாசிட்டிவ் ஆனோர் எண்ணிக்கையை மட்டும் கொடுத்துவிட்டு கடமை முடிந்ததாகச் சென்று விடுகிறார்கள்.
கொரோனா காலத்தில் மக்களைக் காப்பாற்றும் மகத்தான பணியில் இருக்கும் மருத்துவத் துறையினரையும் போராடும் நிலைமையிலேயே அரசு வைத்திருப்பது வேதனை தருவதாகும்.

கடந்த 4 நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரத்தைத் தாண்டி வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை ஆகிய ஐந்து மண்டலங்களையும் கடுமையான அரண் அமைத்துக் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள அனைவருக்கும் பரிசோதனைகளை வீடுவீடாகச் செய்ய வேண்டும். இப்பகுதியைச் சென்னையின் மற்ற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்த வேண்டும். கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்குத் தேவையான பொருட்களை அரசே வழங்க வேண்டும். அப்பகுதிக்குள் வெளியார் யாரும் நுழைய முடியாதபடி கண்காணிக்க வேண்டும். சென்னையின் ஐந்து மண்டலங்களைக் காப்பதில் அரசு முழுச்சிந்தனையையும் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »