Press "Enter" to skip to content

சபரிமலை கோவில் நடை 14ம் தேதி திறப்பு- பக்தர்களுக்கு அனுமதி இல்லை

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாதாந்திர பூஜைக்காக வரும் 14ம் தேதி நடை திறக்கப்படும்போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை:

கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டன. கோவில்களில் பூஜைகள் மட்டும் செய்ய அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.

அதன்பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, ஜூன் 8ம் தேதி முதல் கோவில்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, மிதுன பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை ஜூன் 14-ந்தேதி திறக்கப்படும்போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கோவில்  நிர்வாகம் தெரிவித்தது.

தினமும் காலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒரு மணி நேரத்திற்கு தலா 200 பேர் வீதம் தினமும் 16 மணி நேரத்தில் 3,200 பேர் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இன்று தேவசம்போர்டு தலைவர் வாசு, தந்திரி மகேஸ் மோகனரு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கோவில் நடைதிறப்பு, பூஜைகள் மற்றும் திருவிழாக்கள்  குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா பரவல் அதிகரிப்பதால் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க கூடாது என தந்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனையைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுரேந்திரன், 14ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்போது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட மாட்டாது என தெரிவித்தார்.

‘மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோவில் நடை ஜூன் 14ல் திறக்கப்படுகிறது. 19ம் தேதி வரை மிதுனம் மாத பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. கொரோனா பரவலாம் என்பதால் ஜூன் 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கவிருந்த ஆராட்டு விழாவும் ரத்து செய்யப்படுகிறது’ என்று அமைச்சர் சுரேந்திரன் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »