Press "Enter" to skip to content

கடந்த இரண்டு வாரங்களாக தினமும் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தினமும் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெனிவா:

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதற்கிடையில், தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 81 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 34 லட்சத்து 81 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 41 லட்சத்து 87 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 லட்சத்து 38 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக தினமும் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் கூறுகையில், தொடக்கத்தில் வைரஸ் 1 லட்சம் பேருக்கு பரவ இரண்டு மாதங்களுக்கு மேலானது. ஆனால் தற்போது கடந்த இரண்டு வாரங்களாக தினமும் 1 லட்சம் பேருக்கு வைரஸ் பரவுகிறது. குறிப்பாக தெற்கு ஆசியா மற்றும் அமெரிக்காவில் வைரஸ் பரவும் வேகம் மிகவும் அதிகமாக உள்ளது.

வைரஸ் மறு எழுச்சி பெறலாம் என்பதால் உலக நாடுகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.  

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »