Press "Enter" to skip to content

சர்வதேச விமான போக்குவரத்து தொடங்குவது எப்போது?: மத்திய மந்திரி விளக்கம்

சர்வதேச விமான போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் பூரி விளக்கம் அளித்தார்.

புதுடெல்லி :

ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட உள்நாட்டு விமான போக்குவரத்து, கடந்த மாதம் 25-ந் தேதி மீண்டும் தொடங்கியது. ஆனால், சர்வதேச விமான போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், இதுகுறித்து ஒரு பேட்டியில் மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் பூரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்குவது பற்றி என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

கொரோனா வைரசின் போக்கு நாம் கணிக்கும் அளவுக்கு இருந்தால், ஒட்டுமொத்த சிவில் விமான போக்குவரத்து நடைமுறையும் ஒத்துழைத்தால், சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்குவது பற்றி அடுத்த மாதம் நாம் முடிவு எடுக்க தொடங்கலாம்.

இந்த முடிவை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மட்டும் எடுக்க முடியாது. மாநிலங்களும் தங்கள் மாநில நிலவரத்தின் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும்.

ஏனென்றால், தென்னிந்தியாவில் ஒரு பெரிய மாநிலம், நாம் உள்நாட்டு விமான போக்குவரத்தை திறந்துவிட்ட நிலையில், மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.

மற்ற நாடுகளிலும் இதுபோன்று பார்த்துள்ளேன். இப்படியெல்லாம் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய முயன்று வருகிறோம்.

எவ்வித பின்னடைவோ, ஆபத்தோ இல்லாமல் முடிவு எடுக்க வேண்டி இருக்கிறது. சர்வதேச நாடுகளில் இருந்து பயணிகள் வரும்போது, அவர்களை ஏற்றுக்கொள்ள மாநிலங்கள் தயாராக இருக்க வேண்டும். அதற்காக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »