Press "Enter" to skip to content

எச்-1பி விசா நிறுத்த முடிவை திரும்பப் பெற செய்யவேண்டும்- மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

அமெரிக்க அதிபர் டிரம்பிடம் எச்-1பி உள்ளிட்ட விசாக்கள் தற்காலிக நிறுத்த முடிவைத் திரும்பப் பெறவைக்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை:

அமெரிக்காவால் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் எச்-1 பி உள்ளிட்ட விசாக்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா என்ற கொடிய நோய்த் தொற்றினால் உலகப் பொருளாதாரமே எதிர்மறையான விளைவுகளை வேகமாகச் சந்தித்து வருகின்ற நேரத்தில், எச்-1பி, எச்-2பி, எல்-1 விசாக்கள் மற்றும் தற்காலிகப் பணி விசாக்கள் உள்ளிட்டவற்றை “தற்காலிகமாக” நிறுத்தி வைத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருப்பது, அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது.

கொரோனா வைரஸ் பேரிடரிலிருந்து பொருளாதார ரீதியாக மீட்சி பெற முயற்சி செய்யும் நம் இந்திய நாட்டின் மீது, திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள மிகப்பெரிய தாக்குதலாகவே இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

அமெரிக்கத் தூதரகத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் எச்-1பி விசாவில் 75 சதவீதம் பேர் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை அதிகரித்திட வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவினை எடுத்திருந்தாலும்; அந்நாட்டில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம், தொழில்நுட்பத்திலும், மருத்துவத்திலும் அறிவு சார்ந்த முன்னேற்றத்திற்கு பெரும்பங்களித்து வரும் இந்தியப் பணியாளர்களுக்கு, பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும், இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அமெரிக்கா உணர்ந்திட வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »