கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை அடுத்த வாரத்தில் 1 கோடியை எட்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெனீவா:
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.
இந்த வைரசுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் உலக நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு ஈடுபட்டுள்ளன.
கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94 லட்சத்தை கடந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை அடுத்த வாரத்தில் 1 கோடியை எட்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பு பொது இயக்குநர் கூறுகையில், அடுத்த வாரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியை எட்டும் எதிர்பார்க்கிறோம்.
தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகளுக்கான ஆய்வுகள் தொடர்ந்தாலும், நம்மிடம் இருக்கும் கருவிகளை கொண்டு தற்போதைக்கு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவசரமான பொறுப்பு நம்மிடம் உள்ளது என்ற நிதானமான நினைவூட்டலாக இது அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Source: Maalaimalar