Press "Enter" to skip to content

தந்தை-மகன் மரணம்: ‘காவல் துறை மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம்’ ராகுல் காந்தி கடும் கண்டனம்

சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் போலீசாரின் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம் என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்சை சாத்தான்குளம் போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இருவரின் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க வலியுறுத்தி தமிழகத்தில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் உயிரிழந்தவர்களுக்கு நீயாயம் கேட்டு சமூகவலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில், சாத்தான்குளம் உயிரிழப்புகள் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

”போலீசாரின் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம். நமது பாதுகாவலர்களே ஒடுக்குமுறையாளர்களாக மாறுவது மிகவும் சோகமான ஒன்று. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் மரணத்திற்கு உரிய நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்யவேண்டும் JusticeForJeyarajAndFeni’’ என

அவர் தெரிவித்துள்ளார். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »