Press "Enter" to skip to content

கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த வீரர்களின் பெயர்களில் கொரோனா சிறப்பு வார்டுகள்

கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த இந்திய வீரர்களின் தியாகத்தை போற்றி கவுரவிக்கும் வகையில் டெல்லி மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டுகளுக்கு அவர்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன.

புதுடெல்லி

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15ம் தேதி இந்தியா-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். அவர்களின் தியாகத்தை போற்றி கவுரவிக்கும் வகையில், டெல்லியில் உருவாக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுகளுக்கு அவர்களின் பெயர்களை சூட்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) முடிவு செய்துள்ளது.

இந்த சிறப்பு கொரோனா மருத்துவமனை பணிகள் முடிவடைந்துள்ளன. இதனை உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் நாளை திறந்து வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டெல்லி சத்தர்பூர் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான தற்காலிக மருத்துவமனையில் 10 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுமார் ஆயிரம் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதில் ஐசியு மற்றும் வென்டிலேட்டர் வார்டுக்கு, கல்வான் மோதலில் உயிரிழந்த கமாண்டர் சந்தோஷ் பாபுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற வார்டுகளுக்கும், உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »