Press "Enter" to skip to content

உலக வர்த்தக மைய தாக்குதலின் போது எடுக்கப்பட்ட பிரபல புகைப்படத்தில் இடம்பெற்ற நபர் கொரோனாவுக்கு பலி

அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட பிரபல புகைப்படத்தில் இடம்பெற்ற நபர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தார்.

நியூயார்க்:

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி (911) அமெரிக்கவின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 

குறிப்பாக நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரம் மீது விமானத்தை கொண்டு மோதச்செய்து பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தினர்.

அமெரிக்க வரலாற்றில் அழிக்க முடியாத நாளாக 911 தாக்குதலுக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. 

இதற்கிடையில், உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டபோது அப்பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்துக்கொண்டு ஓடினர். 

அப்போது அங்கு இருந்த அசோசியேட் பிரஸ் நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் தாக்குதல் நடைபெற்ற பகுதியில் இருந்து மக்கள் ஓடி வருவதையும், வர்த்தக மைய கட்டிடம் இடிந்து விழுவதையும் புகைப்படமாக எடுத்தார்.

தாக்குதலுக்குள்ளான கட்டிடத்தில் இருந்து புகை வெளியாவதையும், அதை கண்ட அச்சத்தில் பலர் ஓடி வருவதையும் பிரதிபளிக்கும் விதமாக எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் உலகம் முழுவதும் செய்தித்தாள்களில், தொலைக்காட்சிகளிலும் வெளியாகி பிரபலம் ஆனது.

அதன்பின்னர் அந்த புகைப்படத்தில் கருப்பு சட்டை அணிந்திருந்த நபர் நியூயார்க்கை சேர்ந்த ஸ்டிபர் கூப்பர் என்பது தெரியவந்தது. அப்போது 60 வயதான கூப்பர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக வேலை செய்து வந்தார். பின்னர் அவர் புளோரிடா மாகாணத்திற்கு இடம்பெயர்ந்துவிட்டார்.

இந்நிலையில், கூப்பர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவில் கொரோனா தொடங்கும் போதே கூப்பருக்கு பாதிப்பு ஏற்பட்டு விட்டதாகவும் புளோரிடாவில் சிகிச்சை பெற்றுவந்த கூப்பர் கடந்த மார்ச் 28 ஆம் தேதி உயிரிழந்துவிட்டதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.      

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »