Press "Enter" to skip to content

பெற்றோரை கண்முன்னே கொன்ற தலிபான் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய 15 வயது சிறுமி

ஆப்கானிஸ்தானில் தனது பெற்றோரை கொன்ற தலிபான் பயங்கரவாதிகளை 15 வயது சிறுமி சுட்டுக்கொண்டு பழிதீர்த்துள்ளார்.

காபுல்:

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நிலவி வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த மோதல்களின் போது சில சமயங்களில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்தும் தலிபான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

குறிப்பாக அரசுப்படையினருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும், அரசுப்படையினருக்கு ரகசிய தகவல் வழங்குகிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையின் பொதுமக்களையும் ஈவு இரக்கமின்றி தலிபான்கள் கொன்று வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவு தெரிவித்த தனது தந்தை மற்றும் தாயை கொன்ற தலிபான் பயங்கரவாதிகளை 15 வயது நிரம்பிய சிறுமி சுட்டுக்கொன்று பழிதீர்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் கடந்த வாரம் நிகழ்ந்த போது தற்போதுதான் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  

ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணம் தைவாரா மாவட்டம் கிர்வா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி கோமர் குல். இவரது குடும்பத்தில் மொத்தம் 4 பேர். தாய், தந்தை, சகோதரருடன் கோமர் குல் வசித்து வந்தார்.

கிர்வா கிராம தலைவராக செயல்பட்டு வந்த கோமரின் தந்தை ஆப்கன் அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த தலிபான்கள் கடந்த வாரம் இரவு கோமரின் வீட்டிற்கு சென்றனர்.

கோமரின் தந்தை மற்றும் தாயை வீட்டில் இருந்து வெளியே தரத்தரவென இழுத்து வந்த தலிபான்கள் இவருவரையும் கடுமையாக தாக்கினர். தடுக்க முயற்சித்த கோமரையும் தாக்கினர். இறுதியாக தந்தை மற்றும் தாயை

வீட்டின் வாசலில் வைத்து கோமர் மற்றும் அவரது சகோதரரின் கண்முன்னே சுட்டுக்கொன்றுனர்.

தந்தை மற்றும் தாய் கண்முன்னே சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த கோமர் வீட்டிற்குள் சென்றார். அங்கு தனது தந்தை பாதுகாப்பிற்காக வைத்திருந்த ஏகே 47 நவீன ரக துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தார்.

தந்தை மற்றும் தாய் கொல்லப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியும், பெற்றோரை கொன்றவர்களை பழிவாங்க வேண்டும் என்ற கோவமும் கொண்டிருந்த கோமர் தனது வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த தலிபான்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்.

கோமர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வாசலில் நின்றுகொண்டிருந்த 2 தலிபான்கள் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

கோமரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கிய அவரின் சகோதரனும்

பெற்றோர் உயிரிழப்புக்கு காரணமான தலிபான்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினான்.

சிறுவன் சுட்டதில் சில தலிபான்கள் காயமடைந்தனர். கோமர் மற்றும் அவரது சகோதரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் அதிர்ச்சியடைந்த எஞ்சிய தலிபன்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். 

இதையடுத்து தந்தை மற்றும் தாயை இழந்தபோதிலும் அவர்கள் உயிரிழக்க காரணமான பயங்கரவாதிகளை கொன்று பழித்தீர்த்ததால் கோமர் குல் சற்று ஆறுதல் அடைந்துள்ளார்.

பொற்றோரை கொன்ற தலிபான்களை 15 வயது சிறுமி கோமர் குல் மற்றும் சகோதரர் இருவரும் இணைந்து சுட்டுக்கொன்ற சம்பவம் ஆப்கான் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. இருவருக்கும் அந்நாட்டு அதிபர் உள்பட அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தலிபான் பயங்கரவாதிகளை எதிர்த்து மேலும் சண்டையிட தான் தயாராக உள்ளதாக கோமர் குல் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »