கவர்னருக்கு எதிராக ராஜ்பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் தர்ணாவில் ஈடுபட்டு கோஷம் எழுப்பிய நிலையில், துணை ராணுவம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.-க்களுடன் கவர்னரை சந்திக்க சென்றார். அப்போது சட்டசபையை கூட்ட வேண்டும் என்று அசோக் கெலாட் கேட்டுக் கொண்டார். ஆனால், கவர்னர் கோரிக்கையை நிராகரித்ததாக தெரிகிறது.
இதனால் எம்.எல்.ஏ.-க்கள் கவர்னர் மாளிகையில் தர்ணாவில் ஈடுபட்டனர் அப்போது கவர்னருக்கு எதிராக கோஷமிட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் அரசியலமைப்பு புனிதத்தை காப்பாற்ற துணை ராணுவம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநில பா.ஜனதா தலைவர் குலாப் சந்த் கட்டாரியா கூறுகையில் ‘‘சட்டம் மற்றும் ஒழுங்கை ராஜஸ்தான் காவல்துறையின் கைகளில் விடக்கூடாது என்று மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். சிஆர்பிஎஃப் துணை ராணுவத்தை குவிக்க வேண்டும். அப்போதுதான் அரசியலமைப்பு பதவியின் புனிதத்தன்மை உறுதிப்படுத்தப்படும்.
ராஜ்பவனில் போராட்டம் நடத்துபவர்களை விரட்டியடிக்க வேண்டும், அதற்கான அனைத்து சட்ட தீர்வுகளும் பயன்படுத்தப்பட வேண்டும். ராஜ்பவனில் நீங்கள் எதிர்ப்பு தெரிவித்த விதம் மற்றும் எழுப்பப்பட்ட கோஷங்கள், வேறு எந்த முதல்வரும் இதுபோன்று கண்டிக்கத்தக்க வகையில் எதுவும் செய்ய முடியாது என்று நான் நினைக்கிறேன்.
ராஜ்பவனை மக்கள் சுற்றி வளைப்பார்கள் என்ற முதல்வரின் அறிக்கையை தேசமும், சட்ட வல்லுநர்களும் கவனிக்க வேண்டும்.’’ என்றார்.
Related Tags :
Source: Maalaimalar